பேச்சை நிறுத்த கூறிய டிஎஸ்பி! மறுத்து கமெண்ட் அடித்த சீமான்.. தஞ்சாவூரில் அதிரடியாக பாய்ந்தது வழக்கு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று நடந்த நாம் தமிழர் பரப்புரை கூட்டத்தில் இரவு 10 மணி ஆகியும் சீமான் தனது பேச்சை நிறுத்தவில்லை. பேச்சை நிறுத்தும்படி டிஎஸ்பி கூறியும் சீமான் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பேசிய நிலையில் சீமான் மீதும், தஞ்சாவூர் வேட்பாளர் கிருஷ்ணகுமார் மீதும் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
தஞ்சாவூரில் சீமான்
நேற்று முன்தினம் இரவில் சீமான் தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்டார். தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணகுமார் என்பவர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவரை ஆதரித்து தஞ்சாவூரில் உள்ள பனகல் கட்டடம் அருகே சீமான் பரப்புரை செய்தார். நாம் தமிழர் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பது பற்றி சீமான் எடுத்துரைத்து வந்தார்.
டிஎஸ்பி சொல்லியும் கேட்காத சீமான்
அப்போது இரவு 10 மணி ஆனது. தேர்தல் விதிமுறைப்படி இரவு 10 மணிக்கு மேல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் யாரும் பிரசாரம் செய்ய அனுமதியில்லை. ஆனால் இரவு 10.12 மணி ஆனபோதும் சீமான் தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து தஞ்சாவூர் டிஎஸ்பி சோமசுந்தரம் பரப்புரையை முடித்து கொள்ளும்படி சீமானிடம் சைகை காண்பித்தார்.
இதனை கவனித்த சீமான், ''இந்த காவல்துறை அதிகாரி இப்படியே (கையில் கட்டியிருந்த வாட்சை காண்பித்து) காட்டி கொண்டிருக்கிறார். நேரம் தவறிவிட்டால் ஒரு வழக்கு அவ்வளவு தானே.. நான் பேசுறது போலீஸ்க்கும் சேர்த்து, போலீஸ் புள்ளைக்கும் சேர்த்து தான். சரி, நம்மால் அவருக்கு நெருக்கடி வேண்டாம். நமக்கு வழக்கு ஒன்றும் புதிது இல்லை'' என்று கூறியதோடு, நாம் தமிழர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அனைவருக்கும் வாக்களிக்கும்படி கூறினார்.
சீமான் மீது பாய்ந்தது வழக்கு
இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரியான சுரேஷ் குமார் சார்பில் தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சீமான் மீது தேர்தல் நடத்தை விதியை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல், தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கிருஷ்ணசாமி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காரைக்குடியில் சீமான் போட்டி
இந்த சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்கி உள்ளது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 117 ஆண்கள், 116 பெண்கள், ஒரு திருநங்கை ஆகியோரை வேட்பாளராக சீமான் நிறுத்தி உள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முறை சீமான் தனது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த தேர்தலில் சீமான் இந்த முறை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். சிவகங்கை சீமானின் சொந்த மாவட்டம். இதனால் கட்டாயம் காரைக்குடியில் வென்று விடலாம் என்று சீமான் நினைக்கிறார். இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காரைக்குடி சட்டசபை தொகுதி மீதான கவனம் அதிகரித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications