காவிரி: தமிழ் இளைஞர்கள் பழிவாங்கினால் இறையாண்மை என்னவாகும்? சீமான் எச்சரிக்கை #cauvery
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்க தமிழ் இளைஞர்களும் தமிழகத்தில் கன்னடர்களை தாக்கினால் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு என்னவாகும்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் காவிரி நீர் உரிமை மீட்புப் பேரணி சென்னையில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் இயக்குநர்கள் சேரன், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து புதுப்பேட்டை வரை நடைபெற்ற இப்பேரணியில் 500க்கும் அதிகமானோர் பங்கேற்றார். பேரணி புதுப்பேட்டை அருகே சென்றபோது இளைஞர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகா தடுக்கவில்லை
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் உரிமையை தர மறுத்து தமிழர்களை தாக்கி, தமிழர் சொத்துகளை சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து பேருந்துகளை சிறைபிடித்து வெறியாட்டம் போடுகின்றனர் கன்னடர்கள். ஆனால் இதை தடுத்து நிறுத்தவில்லை கர்நாடக அரசு.
தமிழர் வளம் தமிழருக்கே
இந்த வெறியாட்டத்துக்கு ஊட்டம் அளித்த கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி இந்த பேரணியை நடத்தியுள்ளது. காவிரி நதிநீர் உரிமை கன்னடர்களுக்கு சொந்தம் என்றால் தமிழ்நாட்டு வளம் தமிழருக்கே என்ற நிலைமை உருவாகாதா?
என்ன சிக்கல்?
பாகிஸ்தானும் இந்தியாவும், இந்தியாவும் வங்கதேசமும், இஸ்ரேலும் பால்ஸ்தீனமும் நதிநீரை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் ஒரே நாட்டுக்குள் இருக்கும் சகோதர மாநிலங்கள் பகிர்வதில் என்ன சிக்கல்?
ஒருமைப்பாடு என்னவாகும்?
கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கும் போது இங்குள்ள கன்னடர்களை நாங்கள் தாக்கினால் இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை என்னவாகும்? இறையாண்மை, ஒருமைப்பாடு என்பது தமிழர்களுக்கு மட்டும்தானா? கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தவருக்கு இல்லையா?
தமிழ் தேசிய இனத்துக்கு அவமானம்
தமிழ் பிள்ளைகளை அடிமை போல அரைநிர்வாணப்படுத்தி படங்களை எடுத்து வெளியிடுவது என்பது ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்துக்கே அவமானம். இதற்கு பதிலுக்கு பதில் பழிக்கு பழி என ஒவ்வொரு தமிழ் இளைஞனும் இறங்கினால் நிலைமை என்னவாகும்? சுடுகாடாகிப் போகாதா?
ஜனநாயக பிள்ளைகள்
மானமும் வீரமும் உயிரென வாழ்ந்த பிள்ளைகள் நாங்கள் ஜனநாயகத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம். நாங்களும் எங்களுடைய வளம் எங்களுக்கே; நெய்வேலி, கல்பாக்கம், கூடங்குளம் மின்சாரம் உங்களுக்கு இல்லை என்றால் நிலைமை என்னவாகும்?
இவ்வாறு சீமான் கேள்வி எழுப்பினார்.