வைகோ தலைமையிலான மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தில் 'நாம் தமிழர்' இணையாது: சீமான் அறிவிப்பு
திருச்சி: வைகோ தலைமையிலான மக்கள் நலனுக்கான கூட்டியக்கத்தில் நாம் தமிழர் கட்சி இணையாது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் கீழப்புதூரில் நடந்தது. இதில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. நாங்கள் தனித்து தான் போட்டியிடுகிறோம். அ.தி.மு.க,. தி.மு.க. என்ற இரு கட்சிகளுடன் வைகோ மாறி, மாறி கூட்டணி வைக்காமல் இருந்து இருந்தால் நாங்கள் இந்த கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்றார்.

முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:
தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது. தனக்கு கிடைக்காத கல்வி வருங்கால பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று ஓடி, ஓடி படிக்க வைத்தார் காமராஜர். ஆனால் இப்போது தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் கோடிக் கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
அந்த வருமானம் அரசாங்கத்துக்கு போய் சேருகிறது என்றால், டாஸ்மாக் தொழிற் சாலைகள் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு போய் சேருகிறது? இங்கு தெருவுக்கு 4 டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது, 200 கார்டுகளுக்கு ஒரு ரேஷன்கடை என்று ஏன் கொண்டு வர முடியாது? அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு என்கிறார்கள். ஆனால் அனைத்து பஸ்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அப்படி இருக்கும்போது இழப்பு எப்படி வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதில் 50 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சீமான் பேசினார்.
இக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயரை சீமான் அறிவித்தார். திருச்சி கிழக்கு தொகுதி இரா.பிரபு, மேற்கு தொகுதி சேது.மனோகரன், திருவெறும்பூர் சோழசூரன், ஸ்ரீரங்கம் கமல், மணப்பாறைஅருணகிரி, மண்ணச்சநல்லூர் மணிகண்டன், முசிறிஆசை தம்பி, லால்குடி சம்பத், துறையூர் சத்யா செல்வராசு ஆகியோர் போட்டியிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications