ஜெ. விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நெருக்கடி கொடுப்பதா? கருணாநிதிக்கு சீமான் கடும் எதிர்ப்பு
இளையான்குடி: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்ய தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் சீமான் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். மதுவினால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. எனவே தமிழக அரசு பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
தி.மு.க தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என கூறி வருகிறார். அது தவறான செயலாகும்.
சிறப்பு நீதிமன்றம் தண்டனையை விதிக்கிறது. மேல் நீதிமன்றம் தண்டனையை நீக்கி விடுதலை செய்துள்ளது. இதில் என்ன தவறு உள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதி செய்யாத தவறு ஏதும் உண்டா. எத்தனையோ தவறு செய்து ஊழலும் செய்துள்ளார். எனவே அவர் முதல்வர் ஜெயலலிதா வழக்கை மேல் முறையீடு செய்ய சொல்வது சரியல்ல. எனவே இந்த வழக்கை மேல்முறையீடு செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.