4 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் சாதனை எதுவும் இல்லை: சீமான் சாடல்
சென்னை: தமிழகத்தில் 4 ஆண்டுகால அண்ணா தி.மு.க. ஆட்சியில் சாதனை எதுவும் இல்லை என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
ஈழத் தமிழர்களின் துயரத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. கடந்த 4 ஆண்டுகளில் 234 தொகுதிகளிலும் அடிப்படை உறுப்பினர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரையும் நியமித்து உள்ளோம்.

அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வலிமையை நாம் தமிழர் கட்சி பெற்று இருக்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் பெண்கள் போட்டியிட அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்படும். திருநங்கைகள் போட்டியிட வந்தாலும் வாய்ப்பு கொடுப்போம்.
தமிழகத்தில் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பிளவுபட்டு கிடக்கும் தமிழர்களை, நாம் தமிழராக ஒன்றிணைப்பதே எங்கள் கட்சியின் நோக்கம். இதனை மெய்ப்பிக்கும் வகையில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாட்டை நடத்துகிறோம். சாதி, மதங்களை கடந்து அனைத்து தமிழர்களும் மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட உள்ளோம்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக எதிர் காலத்தில் நாம் தமிழர் கட்சி திகழும். தமிழகத்தை பொறுத்த வரையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வேண்டாம். அதற்கு மாற்றாக ஒருவர் வர வேண்டும் என்ற நிலை பரவலாகவே உள்ளது. அதன் காரணமாகவே 8% வாக்குபெற்று விஜயகாந்த் வெற்றி பெற முடிந்தது.
ஆனால் அவரும் திராவிட கட்சிகளோடு கூட்டணி என்ற நிலையை எடுத்து விட்டார். இதனால் அவரது வாக்குவங்கி குறைந்து உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலை நாம் தமிழர் கட்சி ஒரு தேர்வாகவே பார்க்கிறது. 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி உரிய அங்கீகாரத்தை நிச்சயம் பெறும்.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து அவரது சகோதரரின் இல்ல திருமணத்திற்கு அழைப்பு விடுத்து இருப்பது பண்பாட்டின் அடையாளமாகும். டெல்லியில் நாடாளுமன்றத்தில் எதிரும், புதிருமாக மோதிக் கொள்ளும் காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைவர்கள் வெளியே வந்ததும் ஒன்றாக தேனீர் அருந்தி விவாதம் செய்கிறார்கள். அது போன்ற நிலைமை தமிழகத்தில் இல்லை. இங்கு சாதி, மத தீண்டாமையை விட அரசியல் தீண்டாமை அதிகம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்தபோது அதனையும் நாம் தமிழர் கட்சி வரவேற்றது. இப்போது அவர் விடுதலையாகி இருப்பதையும் வரவேற்கிறோம். எப்போதுமே நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக நாங்கள் எதிர்காலத்தில் வருவது உறுதி.
மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசை பொறுத்தவரையில் ஓராண்டில் சாதனை எதுவும் இல்லை. அதே போல் தமிழகத்தில் 4 ஆண்டு ஆட்சியிலும் சொல்லும்படி ஒன்றும் இல்லை.
இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications