கட்டிக்கட்டியாக தங்கம் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு
கோடிக்கணக்கில் ரொக்கப்பணத்தை பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டி புழல் சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: 136 கோடி ரொக்கம், 177 கிலோ தங்கத்தைப் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை புழல் சிறையில் முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போயஸ் கார்டனுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 136 கோடி ரூபாய் ரொக்கம், 177 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் மிக புள்ளிகளுடனும், அரசின் உயர் மட்ட அதிகாரிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு சேகர் ரெட்டி கோடிக்கணக்கான பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை பெற்றார்.

கணக்கில்லாமல் பணத்தை சேர்த்த சேகர் ரெட்டிக்கு திடீரென வருமானவரித் துறை வைத்தது ஆப்பு. சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி மற்றும் நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர் சீனிவாசலு ரெட்டி ஆகியோரை சிபிஐ போலீசார் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை குற்றச்சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திடீரென கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலுவை ஜனவரி 3ம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications