சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு… மணல் மாஃபியா சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேர் ஜாமீனில் விடுதலை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ஜாமீன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணல் மாஃபியா சேகர் ரெட்டி, சீனிவாசலு மற்றும் பிரேம்குமார் உள்ளிட்ட மூவரும் இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக போயஸ் தோட்டத்திற்கு நெருக்கமானவராக இருந்த சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைது செய்தது.

சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் மார்ச் மாதம் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சேகர் ரெட்டியை அமலாக்கத்துறையினர் திடீரென கைது செய்தனர். அவருடன், சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் மூவருக்கும் ஜாமீன் வழங்கியதை அடுத்து இன்று அவர்கள் 3 பேரும் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications