15 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு வரத் தயாராக உள்ளனர் - செம்மலை அதிரடி
சேலம்: தற்போது 15 அமைச்சர்கள், 35 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்கு வரத் தயாராக உள்ளனர் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செம்மலை எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அதிகார போட்டி ஏற்பட்டு இரு அணிகளாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகிறது.
இதனிடையே அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற சில தினங்களிலே சசிகலா சிறை சென்றுவிட்டார். அப்போது தினகரனுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளித்தார் சசிகலா. இதனால் தினகரனின் கை ஓங்கியது. இதனிடையே இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். முடக்கப்பட்ட சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் தினகரனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து இரு புறமும் கிரீன் சிக்னல் விழுந்தது. இதைத் தொடர்ந்து சசிகலாவையும், தினகரனையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை விடுத்தனர். எனினும் இதற்கு தினகரன் அணியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அதையும் மீறி பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளிலும் தலா 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை குறித்து இருதரப்பிலும் மாறி மாறி கருத்துக் கூறிவருவதால், இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேட்டூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செம்மலை எம்எல்ஏ சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு துளி அளவும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது 15 அமைச்சர்கள், 35 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் அணிக்குவர தயாராக உள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.