செங்கோட்டை அருகே திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி 6 பேர் படுகொலை.... அதிர வைக்கும் பரபரப்பு தகவல்கள்!!
செங்கோட்டை : நெல்லை செங்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் திட்டமிட்ட படுகொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் கேரளா நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இன்று காலை செங்கோட்டையிலிருந்து புளியரைக்கு கற்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி தனது ஷேர் ஆட்டோவில் அடிவெட்டி, அவரது மகன் மகேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு புளியரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார்.

அப்போது கட்டளைக் குடியிருப்பில் இருந்து 2 பெண்கள் புளியரையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற இவர்களது ஆட்டோவில் ஏறியுள்ளனர்.
இதே போல் மேலப்புதூர் பகுதியை சார்ந்த முருகன் என்பவர் புளியரை செல்வதற்காக மேலபுதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் ஏறியுள்ளார்.
2 பெண், 3 ஆண்களை ஏற்றிக்கொண்டு புளியரை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது. புதூர் என்ற பகுதியை நோக்கி செல்லும் போது கேரளாவிலிருந்து செங்கோட்டையை நோக்கி வந்த லாரி ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோவின் முன் பகுதி சுக்கு நூறாகி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ ஓட்டிய கருப்பசாமி வயல் வரப்பில் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
அப்படியிருந்தும் லாரியின் வேகம் குறையாமல் சில நூறு அடி ஆட்டோவை இழுத்துச் சென்றதில் ஆட்டோவில் பயணித்த அடிவெட்டி, முருகன், மற்றும் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாயினர்.
ஆட்டோவில் இருந்த மகேஷ் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக காயமடைந்த மகேஷ் மீட்கப்பட்டு நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்.
இது குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து அதிர வைக்கும் பரப்பரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதில் லாரி ஓட்டுனர் திருமலைகுமார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி இருவரும் உறவினர்கள் என்றும் இவர்கள் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் குளத்தில் விஷம் வைத்து மீன்கள் கொல்லப்பட்டது தொடர்பாக முன் பகை இருந்து வந்ததாகவும் புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன்காரணமாக நேற்று கேரளாவில் லோடு இறக்கிவிட்டு வந்த திருமலைக்குமார் காத்திருந்து இந்த கருப்பசாமி வந்த ஷேர் ஆட்டோ மீது லாரியை திட்டமிட்டு மோதவிட்டு விபத்தை போல ஏற்படுத்தி கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் திருமலைகுமார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லும் போது கையில் கத்தியோடு ஓடியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்துவது வழக்கம். ஆனால் விபத்தை ஏற்படுத்திய லாரி சில நூறு அடி தூரம் ஆட்டோவை இழுத்துச் சென்று நிறுத்தப்பட்டுள்ளதால் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆட்டோ ஓட்டுநர் மீதான முன்பகை காரணமாக குடும்பத்தினர் 2 பேர், பயணிகள் 3 பேர் என மொத்தம் 6 பேரை திருமலைக்குமார் படுகொலை செய்திருப்பதாக போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் தமிழக -கேரளா எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications