செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை பணிகள் மார்ச் 2017 க்குள் முடிவடையும்: தலைமை பொறியாளர் தகவல்
நெல்லை: செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என தலைமை பொறியாளர் சுதாகரராவ் தெரிவித்தார்.
தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய வழித்தடமான செங்கோட்டை -கொல்லம் ரயில் பாதை இரு மாநில மக்களுக்கும் 105 ஆண்டு காலமாக வர்த்தக வழித்தடமாக இருந்தது. கேரள-தமிழக மக்களின் முக்கிய போக்குவரத்து தடமாக விளங்கும் இந்த ரெயில் பாதைக்கான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று இருமாநில மக்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ரயில்வேத் துறைக்கு சவால் விடுக்கும் வகையில் இருந்த இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.357 கோடி தேவை என மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆண்டு தோறும் சுமார் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பணிகள் தொய்வடைந்தன. பழமையான ரயில்வே பாதை திட்டத்தின் அருமை கருதி இவ்வாண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் வேகம் பெற்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஆரியங்காவு, எடமன், தென்மலை ஆகிய பகுதிகளில் உள்ள 5 குகைகளிலும் புதியதாக அமைக்கப்பட்ட குகைகளிலும் சிலிப்பர் கட்டைகள் வைக்கப்பட்டு தண்டவாளங்கள் பொருத்தும் பணி தீவீரமாக நடைப்பெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிடுவதற்க்காக தென்னக ரயில்வேயின் கட்டுமான பிரிவு தலைமை பொறியாளர் சுதாகரராவ் நேற்று தென்காசி வந்தார் பின்னர் அவர் கேரள மாநிலம் எடமண், தென்மலை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை பணிகள் வரும் 201 7மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அதற்காக பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். செங்கோட்டை-புனலூர் அகல் ரயில் பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் ரயில் போக்கு வரத்து தொடங்கும் என்பதால் இரு மாநில எல்லைபகுதிகளில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.