போலி ஆவணங்களை வெளியிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சி... அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம்
போலி ஆவணங்களை வெளியிட்டு அதிமுகவை களங்கப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஆர்.கே. நகர் மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது. மேலும் அமைச்சருகளும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது அம்பலமாகியுள்ளது.
சோதனை தொடர்பான அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இதையடுத்து அறிக்கையுடன் டெல்லி சென்ற விக்ரம் பத்ரா அதனை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனை அதிமுக அம்மா கட்சி தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இதுகுறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆர்.கே. நகர் தொகுதி வாக்களாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள ஆவணங்கள் பொய்யானது என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி போலி ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போலியான ஆவணங்களை வெளியிட்டு தங்களை களங்கப்படுத்த முயற்சிப்பதாகவும் செங்கோட்டையைன் கூறியுள்ளார்.
இந்த தவறான தகவல்களை ஆர்.கே.நகர் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications