திமுகவில் மீண்டும் முக்கியத்துவம் பெறும் "சீனியர்கள்".. திகைப்பில் ஸ்டாலின் குரூப்!
சென்னை: திமுகவில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கியிருந்த நிலையில் சீனியர் தலைவர்கள் பலரும் கட்சியின் தீவிர செயல்பாட்டிலிருந்து ஒதுங்கியிருந்தனர். தற்போது அவர்கள் படிப்படியாக கட்சியில் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியே மீண்டும் கட்சியின் முக்கிய ஆலோசனைகள் மற்றும் முடிவுகளில் நேரடியாக களம் இறங்கியுள்ளதால் இது நாள் வரை ஓரமாக ஒதுங்கியிருந்த மூத்த தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கருணாநிதியை தற்போது அடிக்கடி இவர்கள் சந்தித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். திமுகவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய மாற்றத்தை மு.க.ஸ்டாலின் தரப்பு அமைதியாகவும் அதேசமயம் சற்று பதட்டத்துடனும் கவனித்து வருகிறது.

படிப்படியாக லைம்லைட்டுக்கு வந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள்
ஆரம்பத்தில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு கட்சியில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை. ஏன் ஸ்டாலினே கூட நீண்ட காலமாக முக்கியப் பதவி தரப்படாமல் ஓரமாகத்தான் வைக்கப்பட்டிருந்தார். பின்னர்தான் அவர் அமைச்சராக்கப்பட்டார், துணை முதல்வராக்கப்பட்டார். அதன் பின்னர்தான் ஸ்டாலின் வட்டம் சற்று பெரிதாகத் தொடங்கியது.

சுற்றிலும் ஆதரவாளர்கள்
ஸ்டாலின் கட்சிக்குள் முக்கியப் பதவிகளில் அமரத் தொடங்கிய பின்னர் அவரது ஆதரவாளர்களும் முக்கியப் பதவிகளுக்கு வர வைக்கப்பட்டனர். சீனியர் தலைவர்கள் படிப்படியாக ஓரம் கட்டப்பட்டனர்.

அதிருப்தியில் சீனியர் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் தரப்பு கடந்த லோக்சபா தேர்தலின்போது முழுமையாக கட்சியை கையில் எடுத்துக் கொண்டது. வேட்பாளர் தேர்வு முதல் பிரசார உத்திகள் வரை ஸ்டாலினே நேரடியாக கவனித்தார். அதில் பல முக்கியத் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர். இது ஆபத்தானது, ரிஸ்க்கானது என்று பல மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் எடுத்துக் கூறியபோதும் கருணாநிதியே கூட எதுவும் பேச முடியாத நிலையில்தான் இருந்ததாக கூறப்பட்டது.

தேர்தல் படுதோல்வி.. கவலையில் தலைவர்கள்
எதிர்பார்த்தபடியே திமுகவுக்கு லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது. இதனால் மூத்த தலைவர்கள், கட்சியின் முன்னோடிகள் கவலையில் மூழ்கினர். இனியும் தாமதிக்காமல் கருணாநிதியே நேரடியாக முக்கிய விவகாரங்களை கவனிக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கருணாநிதியை வலியுறுத்தத் தொடங்கினர்.

களம் இறங்கிய கருணாநிதி
இதையடுத்து ஸ்டாலின் தரப்புக்கு சில அதிர்ச்சி வைத்தியங்களைத் தர ஆரம்பித்தார் கருணாநிதி. அவரது சில முக்கிய ஆதரவாளர்களை தட்டி வைத்தார். மூத்த தலைவர்களின் கருத்துக்களையும் கேட்க ஆரம்பித்துள்ளார்.

உற்சாகத்தில் ஆற்காடு, அன்பழகன்
இதனால் கருணாநிதியின் நிழலாக விளங்கிய ஆற்காடு வீராசாமி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் மீண்டும் கோபாலபுரத்திற்கும், அறிவாலயத்திற்கும் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளனர். மூத்த தலைவர்களுடன் கருணாநிதியும் முன்பு போல கட்சி வளர்ச்சி குறித்து ஆர்வத்துடன் கருத்துக்களைக் கேட்கத் தொடங்கியுள்ளார்.

மற்றவர்கள் கருத்துக்கும் மதிப்பு
கருணாநிதியின் முக்கிய பலமே அனைவரின் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்டு அதற்கேற்ப முடிவு எடுப்பதுதான். அதை அவர் மீண்டும் செய்ய ஆரம்பித்துள்ளதால் கட்சி இனி தொய்விலிருந்து மீளும் என்ற நம்பிக்கை மூத்தவர்களுக்கு வந்துள்ளதாம்.

ஸ்டாலின் தரப்பு அமைதியில்
மூத்த தலைவர்கள் மீண்டும் கட்சியில் தீவிர அக்கறை காட்ட ஆரம்பித்திருப்பதை ஸ்டாலின் தரப்பு அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறதாம்.
இந்த மாற்றம் கட்சிக்குப் புதுப் பலம் தருமா என்பதை போகப் போகத்தான் பார்க்க முடியும்.












Click it and Unblock the Notifications