கூவத்தூர் கும்பலிடம் சிக்கிய ஐஜி செந்தாமரைக்கண்ணன், எஸ்.பி முத்தரசிக்கு புதிய பணியிடம்
கூவத்தூர் ரிசார்ட் பிரச்சினையின் போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் செந்தாமரைக்கண்ணன், முத்தரசிக்கு புது பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், வடக்கு மண்டல ஐஜியாக இருந்த செந்தாமரைகண்ணன், காஞ்சிபுரம் எஸ்பியாக இருந்த முத்தரசி ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்றதும் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். தற்போது இவர்கள் அனைவருக்கும் புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
செந்தாமரை கண்ணன் ஐபிஎஸ், சென்னை காவலர் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், முத்தரசி ஐபிஎஸ் சென்னை காவல் நிர்வாக துறை ஏஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார். சசிகலா முதல்வராக கலகக்குரல் எழுப்பினார் ஓபிஎஸ். இதனையடுத்து அதிமுக பிளவுபட்டது.
கூவத்தூர் கூத்து
சசிகலா அணியில் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் இருக்கவே அனைவரையும், கூவத்தூர் விடுதியில் கொண்டுபோய் அடைத்து வைத்தனர். ஒரு வார காலம் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது எம்எல்ஏக்கள் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் தங்கி இருந்த போது காஞ்சிபுரம் எஸ்.பி. முத்தரசி விசாரணை நடத்தினார். அப்போது அங்கு எம்.எல்.ஏக்கள் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப் பதிவு
இந்த நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதியன்று நள்ளிரவில் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன், தப்பி வந்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும், அதில் இருந்து தப்பி வந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசில் புகாரும் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து கூவத்தூர் போலீசார், சசிகலா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
செந்தாமரைக்கண்ணன், முத்தரசி
அதன்பின், ஐஜி செந்தாமரைக்கண்ணன், எஸ்பி முத்தரசி ஆகியோர் பிப்ரவரி 14ஆம் தேதியன்று கூவத்தூர் ரிசார்ட்ஸ்க்குள் போலீசாருடன் நுழைந்து சோதனை போட்டனர். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏக்களுடன் சொகுசு விடுதியில் சசிகலாவும் தங்கியிருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்போர் பட்டியல்
இந்தநிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியை, முதல்வர் பதவி ஏற்கும்படி கவர்னர் அழைப்பு விடுத்தார். பின் சட்டசபையில் தனது அரசின் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்தார். இந்தநிலையில் தற்போது திடீரென்று வடக்கு மண்டல ஐஜி சொந்தாமரைக்கண்ணன், காஞ்சிபுரம் எஸ்பி முத்தரசி ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
புதிய பணியிடம்
தற்போது இவர்கள் இருவருக்கும் புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் முதல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த செந்தாமரை கண்ணன் ஐபிஎஸ், சென்னை காவலர் தொழில்நுட்ப பிரிவு ஐஜியாகவும், முத்தரசி ஐபிஎஸ் சென்னை காவல் நிர்வாக துறை ஏஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.