பொதுப்பணித்துறை கேட்கும் செந்தில் பாலாஜி... உறுதி கொடுத்த டிடிவி தினகரன்
அமைச்சரவைக்குள் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார் செந்தில் பாலாஜி.
சென்னை: தமிழக அமைச்சரவைக்குள் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்று நினைக்கும் செந்தில் பாலாஜி, பொதுப்பணித்துறையை கேட்டு வருகிறாராம். பெற்றுத்தருவதாக உறுதி அளித்திருக்கிறாராம் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன் திஹார் சிறையில் இருந்து வெளியில் வந்ததில் இருந்தே அதிரடியாக பல வேலைகளை தொடங்கி விட்டார்.
தனது ஆதரவாளர்கள் சிலரை அமைச்சர் பதவியில் அமர்த்த நினைக்கிறார். ஆனால் அதற்கு பிடி கொடுக்காமல் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
செந்தில் பாலாஜி
கடந்த தினங்களாக அதிமுக எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனை சந்தித்தபடி இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் தினகரனை சந்தித்து ஆலோசித்து வருகிறார். செந்தில்பாலாஜியிடம் தான் தினகரன் நீண்ட நேரம் மனம் விட்டுப் பேசி இருக்கிறார்.
பசையான துறை
நான் எப்பவும் உங்களுக்கு எதிரா செயல்பட்டது இல்லை. உங்க குடும்பத்துக்கு நான் துரோகம் நினைக்க மாட்டேன். நான் எப்பவும் உங்களோட இருப்பேன். நீங்க சொல்றதை கேட்க நான் தயாராக இருக்கேன் என்று சொன்ன செந்தில் பாலாஜி, தனக்கு பசையான துறையான பொதுப்பணித்துறையை கேட்டுள்ளார்.
தினகரன் வாக்குறுதி
நம்மால எந்த சூழ்நிலையிலும் ஆட்சிக்கு ஆபத்து வந்துடவும் கூடாது. எப்படியாவது அமைச்சரவையில் நாம் இடம் பிடிப்போம் என்று கூறிய தினகரன் செந்தில் பாலாஜிக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்.
அமைச்சரவையில் இடம் உறுதி
கடந்த 2011 -2015 வரை ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக அசைக்கமுடியாதவராக இருந்தார். இம்முறை விரைவில் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை கண்டிப்பாக பெறுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
எதிர்க்கும் அமைச்சர்கள்
ஆனால் தினகரன் ஆட்களை அமைச்சரவைக்குள் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரைக்கும் எடப்பாடி பழனிச்சாமி எந்த அறிக்கையோ, பேட்டியோ தினகரனுக்கு எதிராக கூறவில்லை. அமைச்சரவை மாற்றம் என்று வரும்பட்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி தினகரனை எதிர்ப்பாரா? அல்லது பணிந்து செல்வாரா பார்க்கலாம்.