இலவச ஆம்புலன்ஸ் கூப்பிட இனி ‘108’ என்ற நம்பரையே பயன்படுத்துங்க!
சென்னை: கம்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தற்காலிகமாக 044 71709009 என்ற இலவச எண் அறிமுகப்படுத்தப்பட்டது. அரை மணி நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து வழக்கம் போல பயன்படுத்தும் எண்ணிலேயே தொடர்பு கொள்ளலாம் என 108 அவசர ஊர்தி சேவை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களும் பயனடையும் வகையில் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது.
இதனால், குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் திடீர் விபத்து ஏற்பட்டாலோ நோய் வாய்பட்டாலோ உடனடியாக 108 என்ற எண் மூலம் ஆம்புலன்ஸை வரவழைத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் இச்சேவையின் மூலம் 32 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இதில், கர்ப்பிணிகள் 8.39 லட்சம் பேரும், சாலை விபத்தில் காயம் அடைந்தவர்கள் 7.59 லட்சம் பேரும், மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் 1.73 லட்சம் பேரும் அடங்குவர்.
தமிழகம் முழுவதும் இச் சேவையில் 684 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் ஈடுபடுத் தப்படுகின்றன. மேலும், மலைப்பகுதிகளில் செல்வதற்காக பிரத் யேகமாக வடிவமைக்கப்பட்ட 30 ஆம்புலன்ஸ் வாகனங்களும், பச்சிளம் குழந்தைகளுக்காக 37 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் ஆம்புலன்ஸை அழைக்க 108 என்ற எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கம்யூட்டர் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக 108 என்ற எண்ணிற்கு பதிலாக 044-71709009 என்ற இலவச எண்ணில் தற்காலிகமாக தொடர்பு கொள்ளலாம் என்று 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் இன்று காலை 10 மணியளவில் தெரிவிக்கப்பட்டது.
டாடா டோகோமா தொலைபேசியில் இருந்து 108 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும், பி.எஸ்.என்.எஸ், பிற தனியார் தொலைபேசி, செல்போன்களில் இருந்து 044-71709009 எண்ணிற்கு மட்டுமே அழைக்க முடியும் என்று ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இன்று ஒருநாளில் சிக்கல் தீர்ந்து விடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அரைமணி நேரத்தில் கம்யூட்டர் சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டது. வழக்கம்போல 108 என்ற எண்ணையே பயன்படுத்தலாம் என்றும் ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.