டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக... சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
29வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 29வது நாளாக இந்தப் போராட்டம் டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில், 29 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினரும், இந்தியா ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாஸ்திரி பவன் முற்றுகை
100க்கும் மேற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் சாஸ்திரி பவன் முன் ஒன்றுகூடி விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினார்கள். சாஸ்திரி பவனின் வாசலில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் ஆதரவு
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மக்களிடமும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்து மாணவர்கள் பேசும் போது, விவசாயிகள் போராட்டம் தொடரும் வரைக்கும் மாணவர்களின் ஆதரவு விவசாயிகளுக்கு தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்தனர்.