பழக இனிமையானவர், வழக்குகளில் கண்டிப்பானவர்.. நீதிபதி அலமேலு நடராஜன் பற்றி தெரியுமா?
சென்னை: உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் சங்கர் ஆணவப் படுகொலை விவகாரத்தில், சங்கர் மனைவி கவுசல்யாவின் தந்தை 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்ததன் மூலம் நாட்டையே தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் பெண் நீதிபதி அலமேலு நடராஜன்.
இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி, பிபிசி போன்ற சர்வதேச ஊடகங்களும் 6 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை செய்தியை வெளியிட்டிருந்தன என்றால் இதன் முக்கியத்துவத்தை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
நீதிபதி அலமேலு நடராஜனின் சொந்த ஊர் கோவை மாவட்டம் போத்தனூர். அங்கு பிறந்த அலுமேலு, பள்ளி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியில் முடித்தார். சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியில் பயின்றுள்ளார்.

நீதித்துறை
1991 ம் ஆண்டு நீதித்துறையில் காலடி எடுத்து வைத்தார். முதலில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அலமேலு, கோவையில், மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் வேலூரிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக திருப்பூரில் பொறுப்பை ஏற்றுள்ளார் அலமேலு நடராஜன்.

இனிமையானவர்
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற வட்டாரத்தில் அலமேலு நடராஜனுக்கு பெரும் மரியாதை உள்ளது. நீதிபதிகள் வட்டாரத்தில் மட்டுமல்லாது வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் இனிமையாக பழகுவாராம். மனிதாபிமானம் கொண்டவர் என்றபோதிலும், வழக்கு என்று வந்துவிட்டால் சட்டம், சாட்சியங்கள் அடிப்படையில்தான் விசாரித்து தீர்ப்பளிப்பாராம்.

தீர்ப்பு வழங்கும் வரை சாப்பிடவில்லை
சங்கர் ஆணவப் படுகொலை வழக்கை ஒன்றரை ஆண்டுகளாக இவர்தான் விசாரித்து வந்துள்ளார். நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் வரை உணவு சாப்பிடவேயில்லையாம். ஆனால் குற்றவாளிகள் சாப்பிட மறுத்தபோது, அவர்களிடம் எடுத்துக்கூறி, பேசி சாப்பிட வைத்தார் என்று வக்கீல்கள் வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

வரலாற்று சிறப்பு
ஆணவப் படுகொலை விவகாரத்தில், இந்தியாவிலேயே முதல் முறையாக மொத்தமாக 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாம். இதன்மூலம் இந்திய சட்டத்துறை வரலாற்றிலேயே க முக்கியமான தீர்ப்பை நீதிபதி அலமேலு நடராஜன் தனது பேனாவால் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications