மெரீனா கடற்கரை சாலையில் இருந்து மணிமண்டபத்திற்கு இடம் மாறும் சிவாஜி கணேசன் சிலை
சென்னை: சென்னை மெரீனா கடற்கரை சாலையில் காந்தி சிலை எதிரே வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றி புதிதாக கட்டப்பட உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் வைக்க முடிவு செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், "சென்னை கடற்கரை சாலையில் காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் காந்தி சிலைக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை வேறொரு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இவ்வழக்கில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், நடிகர் சிவாஜி கணேசன் சிலை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சிவாஜி கணேசன் சிலையை தமிழக அரசு அகற்ற முடிவு செய்துவிட்டதாக கூறி அரசியல் தலைவர்களும், சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அவமதிப்பு வழக்கு
சிலை அகற்றம் தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் நாகராஜன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். சிவாஜி சிலை அகற்றும் விவகாரத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி இந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்காத தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ் அக்னி கோத்ரி, சசிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு என்னவென்று கேட்டு தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மணிமண்டபத்தில் சிலை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை இடம் மாற்றப்படுகிறது. சிவாஜி மணிமண்டபத்தில் சிலையை நிறுவ முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2 வாரம் அவகாசம்
மணிமண்டபம் கட்டும் வரை சிவாஜி சிலை தொடர்பாக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்னிஹோத்ரி, சசிதரன் அமர்வு கேள்வி எழுப்பியது. சிவாஜி சிலை தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு 2 வாரம் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.