மறைந்த எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல்- சட்டசபை ஒத்திவைப்பு: 6 நாட்கள் நடக்கும்!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த 11 முன்னாள் எம்.எல்.ஏ.க்களான கே.ரா.ராமலிங்கம், எட்மண்ட், த.ரா.ராஜாராம் ரெட்டி, என்.டென்னிஸ், ர.ச.தங்கவேல், லதா பிரியகுமார், கே.சவுரிராஜன், ப.குருசாமி, கு.பாலகிருஷ்ணன், கே.சின்னசாமி, கே.ஆர்.கணபதி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
அதுபோல் எம்.எல்.ஏ. பதவியில் இருந்த ஏற்காடு செ.பெருமாள் மறைவுக்கும் சட்டசபையில் இன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இவற்றை சபாநாயகர் தனபால் வாசித்தார்.
அப்போது, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதோடு சட்டசபையின் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன.
இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தை நாளைக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். இந்த கூட்டத்தில் சஸ்பெண்ட் காலம் முடிந்ததால் தே.மு.தி.கவை சேர்ந்த 6 உறுப்பினர்களும், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த கூட்டத்தொடரை அக்டோபர் 30ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தொடரில் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடும் என தெரிகிறது.
வரும் 25ம் தேதி துணை நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 30ம் தேதி நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications