வர்தா புயலின் தாக்கம்.. சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.. பொதுமக்கள் அவதி !
சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
சென்னை: வர்தா புயலின் தாக்கத்தினால் சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் நேற்று பிற்பகலில் சென்னை துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. இப்புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றால், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சாலைகளில் மரங்கள் அங்காங்கே முறிந்து கிடக்கின்றன.

இதனால் பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வரும் டேங்கர் லாரிகள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பங்குகளில் இருப்பு உள்ளவரை மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் செய்யப்படும் என்பதால் பெட்ரோல், டீசலை நிரப்ப பங்குகளில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பங்குகளில் ஜெனரேட்டர் மூலம் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் கிரெடிட், டெபிட் கார்டு மிஷின்களின் சேவை தடைப்பட்டுள்ளது. இதனால்
பெட்ரோல், டீசல் போடச் சென்றவர்கள் கார்டுகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏடிஎம்களும் முடங்கியு உள்ளது. ரொக்கமாகவும் பணம் எடுக்க முடியாமலும், கார்டுகளை பயன்படுத்த முடியாததாலும் பொது மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications