சித்த மருத்துவ முதுகலை படிப்பு: தேர்வுக் கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு
நெல்லை: சித்த மருத்துவ கல்லூரி முதுகலை படிப்புக்கான தேர்வு கட்டணங்கள் திடீரென இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் திகைப்பில் உள்ளனர்.
தமிழகத்தில் சித்த மருத்துவம் மற்றும் அது தொடர்பான ஓமியோபதி, யுனானி போன்ற படிப்புகளுக்கு பாளை, சென்னை, நாகர்கோவில், திருமங்கலம் உள்பட பல்வேறு நகரங்களில் அரசு கல்லூரிகள் உள்ளன. இங்கு சித்தா இளங்கலை மற்றும் முதுகலை (எம்டி) படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
சித்தா எம்டியில் மருந்தியல், நோய் நாடல், குணவாடம், குழந்தை மருத்துவம் உள்ளிட்ட 6 மருத்துவ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு பாடபிரிவுக்கும் அதிகபட்சம் 5 தேர்வு தாள்கள் உள்ளன.
இந்நிலையில் தேர்வு கட்டணங்களை டாக்டர் எம்ஜிஆர் பல்கலை கழகம் திடீரென இருமடங்காக உயர்த்தியுள்ளது. உதாரணமாக எம்டி முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு தேர்வு கட்டணம் ரூ.1500 ஆகும். இது போல் செய்முறை கட்டணம் ரூ.1000 ஆக இதற்கு முன் இருந்தது. தற்போது பாட தேர்வுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரமாகவும், செய்முறை தேர்வு கட்டணம் ரூ.2 ஆயிரமாகவும் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100, மதிப்பெண் சான்று கட்டணம் ரூ.100 ஆகியவை தனியாக செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.5 ஆயிரம் என 5 பாடத்திற்கும் தேர்வு எழுதும் மாணவர்கள் ரூ.25 ஆயிரத்து 200ஐ கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது பாடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரண்டாம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமாகவும், மூன்றாம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. இதனால் தேர்வை எதிர் கொள்ள இருக்கும் சித்தா மருத்துவ கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.