பிளஸ் 2 தேர்வு முடிவு: புதுச்சேரியில் தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன்?
புதுவை: ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவே இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து விட்டதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுவையில் பிளஸ் 2 தேர்வு தரவரிசை பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி காரைக்கால் பிராந்தியங்களில் 14,250 பேர் தேர்வு எழுதினர். இதில் 12,563 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.16. கடந்த ஆண்டை விட 1.45 சதவீதம் குறைவாகும்.
தேர்ச்சி விகிதம் குறைந்து போனது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. அதனால் போதிய ஆசிரியர்களை நியமிக்க முடியாமல் போனது அதற்கு ஒரு காரணம்.

அரசு பள்ளிகளில்
மேலும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சரிவர படிக்காத மாணவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பி விடுகின்றனர். அவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டியுள்ளது. இதனாலும் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது.
வரும் கல்வியாண்டில்
இந்த கல்வியாண்டில் அதிக தேர்ச்சியை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஜூன் மாதத்திற்குள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
டி.சி கொடுக்க கூடாது
தனியார் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்படும் என்றார்.
புதுச்சேரி பிராந்தியம்
புதுவை பிராந்தியத்தில் தேர்வு எழுதியவர்களில் 88.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 89.3 சதவீதம் பேர் வெற்றிபெற்றிருந்தனர். இந்த ஆண்டு 0.94 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
காரைக்கால் பிராந்தியம்
காரைக்காலில் சற்று அதிகமாக தேர்ச்சி சதவீதம் குறைந்திருந்தது. காரைக்காலில் கடந்த ஆண்டு 90.87சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 86.57சதவீதம் பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். தேர்ச்சி 4சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம்
பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டில் 90.6 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டும் 90.6%தான் தேர்ச்சி விகிதம் இருந்தது. எந்தவித மாற்றமும் இல்லை. இதனிடையே இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு நடைபெற்ற போது பல்வேறு புகார்கள் எழுந்தன. தேர்ச்சி விகிதம் 95% கொண்டு வரவேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் போது வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒரே சிக்கல்தான்
வேதியியல், விலங்கியலில் சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டன. வேளாண் செயல்முறை தேர்வில் குளறுபடி ஏற்பட்டது. கணிதப்பதிவியலில் கடின வினாக்கள் கேட்கப்பட்டன. பொருளியல் கேள்விகளில் மாற்றி கேட்கப்பட்டிருந்தது. என்றாலும் தேர்ச்சி விகிதத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் விடைத்தாள் திருத்தும் போது அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எது எப்படியோ கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு குறையாமல் பார்த்துக்கொண்டே ஒரு சாதனைதான் என்கின்றனர் கல்வித்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications