உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 7 கிலோ வெள்ளி பறிமுதல்.. மதுரையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
மதுரையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன
மதுரை: மதுரையில் உரிய ஆவணமின்றி அரசு பேருந்தில் கொண்டு சென்ற 7 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை மாநகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அக்.16ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தேனியில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தில் வெள்ளிப் பொருட்கள் கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகில் பேருந்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். இதில் கணக்கில் வராத 7 கிலோ 793 கிராம் வெள்ளிக் கொலுசுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நாகமலைப் புதுக்கோட்டையைச் சேர்ந்த தர்மதுரை என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலூரில் இருந்து மதுரை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக 3 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.