சென்னை சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பு: சிமி பயங்கரவாதிகள் பொறுப்பேற்று ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 2014ம் ஆண்டு மே 1ம் தேதி பெங்களூரு-கவுகாத்தி காசிரங்கா எக்ஸ்பிரஸில் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பிற்கு பொறுப்பேற்றுள்ள சிமி பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு, மே மாதம் 1ம் தேதி காலையில் பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. காலை 5.30 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடைந்து இருக்க வேண்டிய அந்த ரெயில் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் தாமதமாக 7.05 மணிக்கு வந்து சேர்ந்தது. எனவே அந்த குண்டுவெடிப்பு சென்னையை குறிவைத்து நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.
அந்த குண்டுவெடிப்பில் பெங்களூருவில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுவாதி என்ற 24 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்று கொண்டிருந்தபோது, இந்த குண்டுவெடிப்பில் சிக்கி அவர் பலியானார். மேலும் 14 பேர் அதில் படுகாயம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பில் துப்பு துலங்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், தடை செய்யப்பட்ட ‘சிமி' இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் மெகபூப், அம்ஜத் கான், ஜாகீர் உசேன், முகமது சலேக் ஆகிய 4 தீவிரவாதிகளும், மெகபூப்பின் தாயார் நஜ்மா பீவியும் ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநில போலீஸ் கூட்டு படையின் அதிரடி வேட்டையில், புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக போலீசார் ஒடிசா சென்று நடத்திய விசாரணையில் அவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சிமி பயங்கரவாதிகள் அளித்துள்ள வாக்கு மூலத்தில் சென்னையை குறிவைத்து நாங்கள் அந்த தாக்குதலை நடத்தவில்லை என்றும், அந்த சமயத்தில் ஆந்திராவில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடியை குறிவைத்தும் தாக்குதலை நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜாகீர் உசேன் என்பவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து அசாமைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகதான் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்னும் சில வாரங்களில் கைதாகியுள்ளவர்களை சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்த தமிழக போலீசார் திட்டமிட்டுள்ளனர்.