குஷ்பு பேச்சை ரசிப்பது ரொம்பக் கேவலம்.. சொல்கிறார் சிங்கமுத்து
திண்டுக்கல்: திமுக மேடைகளில் பல்வேறு திறமையான பேச்சாளர்கள் இருந்த நிலை மாறி தற்போது குஷ்புவின் பேச்சை திமுக தலைவர் கருணாநிதியும், மற்ற தலைவர்களும் கைதட்டி ரசிப்பது மிகவும் கேவலமான விஷயம் என்று சிரிப்பு நடிகர் சிங்கமுத்து கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த தமிழக அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படித் தெரிவித்தார் சிங்கமுத்து.
பட்ஜெட் குறித்து விளக்கிப் பேசிய சிங்கமுத்து திமுகவையும், குஷ்புவையும் சாடிப் பேசினார்.
சிங்கமுத்துவின் வாயிலிருந்து உதிர்ந்த சில வார்த்தை முத்துக்கள்...
சுமையே இல்லாமல் ஒரு பட்ஜெட்
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக ஒரு பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்துள்ளார். பொதுமக்களுக்கு வரிச்சுமை ஏற்படுத்தாத அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராத வகையில் சிறந்த பட்ஜெட்டை அளித்துள்ளதாக தமிழக மக்கள் பாராட்டி உள்ளனர்.
படிக்க நிறைய நிதி
குறிப்பாக கல்விக்காக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.21 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக மாணவர்கள் உலகத்தரமான கல்வியை கற்க ஏற்பாடு செய்துள்ளார்.
கருவுற்றது முதல்.. அள்ளித் தருகிறார் அம்மா
பெண்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட நமது தமிழக முதல்வர் பெண்கள் கருவுற்றது முதல் அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து வருவதோடு பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டங்களையும் செய்து வருகிறார்.
திகார் ஜெயிலிலிருந்து வந்த கனிமொழி
கருணாநிதி மகள் கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து திகார் ஜெயிலில் இருந்து வந்தார். இந்த தொகையை கொண்டு தமிழகத்தின் 1 வருட பட்ஜெட்டையே தாக்கல் செய்து விடலாம்.
கெட்டிக்காரர்கள் திமுகவினர்
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரர்கள் தி.மு.கவினர். தி.மு.க மேடைகளில் பல்வேறு திறமையான பேச்சாளர்கள் இருந்தநிலையில் தற்போது குஷ்புவின் பேச்சை தி.மு.க தலைவர் கருணாநிதியும், மற்ற தலைவர்களும் கைதட்டி ரசிப்பது மிகவும் கேவலமான விஷயம்.
சரித்திரத் திட்டங்கள்
தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் போன்ற சரித்திர திட்டங்களை நிறைவேற்றி பசிப்பிணி மற்றும் நோயை தீர்த்து வருகிறார்.
அன்றே ஆரூடம் கூறிய இந்திரா
கடந்த 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனக்கு பிறகு இந்தியாவை ஆள தகுதியும், திறமையும் நிறைந்த ஒரே பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்று அன்றே ஆருடம் கூறினார். அது இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நிறைவேறப்போகிறது என்றார் சிங்கமுத்து.