சிங்கப்பூர் பேருந்து விபத்து: உயிரிழந்த புதுக்கோட்டை இளைஞரின் தாய் கதறல்

சிங்கப்பூரில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தேக்காவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் ஒன்று சேர்வது வழக்கம். அதன்படி அன்று இரவு பேருந்தில் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு விபத்துக்குள்ளாகி பலியானார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர் யார் மற்றும் கைதானவர்கள் யாரென உடனே தெரியவராததால் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த தகவல் மூலம் இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ச. குமாரவேல் என்பது தெரியவந்துள்ளது.
சீகம்பட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி ராஜலெட்சுமி. இவர்களது மகன்கள் குமாரவேல்(33), ரமேஷ்(25) அதிமுக கிளைச் செயலர். மகள் மகேஸ்வரி.
இதில் 2007-ல் சக்திவேல் இறந்துவிட்டார். குடும்ப பொருளாதார நெருக்கடியினால் தொழில் கல்வி முடித்திருந்த குமாரவேல் அதே ஆண்டில் சிங்கப்பூருக்கு வெல்டர் பணிக்கு சென்றார். சில ஆண்டுகள் சிங்கப்பூரிலும், சில ஆண்டுகள் ஊரிலுமாக இருந்த குமாரவேல் 3-வது முறையாக 2011-ல் 3-வது நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மே மாதம் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட அவரது சகோதரி மகேஸ்வரி தனது கணவருடன் கேரளாவில் திருச்சூரில் தங்கியிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தனியாக இருந்த மகேஸ்வரியை கொலை செய்துள்ளனர்.
திருமணமாகி 3 மாதத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்த குமாரவேல் 10 நாள்கள் இருந்துவிட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றார். இப்போது அவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். இந்த தகவல், செவ்வாய்க்கிழமை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த அவரது தாய் ராஜலெட்சுமிக்கு தெரிவிக்கப்பட்டது.
மகள் இறந்து 4 மாதங்களில் மகனும் இறந்தது குறித்து கதறி அழுத அவரது தாய் ராஜலெட்சுமி கூறியதாவது:
நாங்கள் ஓணாங்குடி அருகேயுள்ள மறமடக்கி பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் வெள்ளம் வந்ததால் எங்கள் வீடு அடித்துச்செல்லப்பட்டது. அதன்பிறகுதான் எங்களுக்கு சத்திரம் பகுதியில் அரசு இடத்தில் வீட்டுமனை கொடுத்தார்கள். எனது கணவரும் 6 ஆண்டுகளுக்கு முன்னவே இறந்துவிட்டார். என் மகன் கஷ்டப்பட்டு வேலை செய்துதான், மகள் மகேஸ்வரிக்கு திருமணம் செய்தோம். 4 மாதத்துல மகளும் இறந்துட்டா. இப்ப ஏன் மகனையும் இழந்துட்டேன். தமிழக அரசுதான் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றார்.
பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்று அங்கு விபத்தில் குமாரவேல் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த கிராமத்தினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications