கோவைக்கு ஹேப்பி நியூஸ்.. சிறுவாணி அணை நிரம்பியது.. பலத்த மழை எதிரொலி!
சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை இந்த ஆண்டு முதல் முறையாக நிரம்பியுள்ளது.
ரம்மியமான காலநிலையும், சிலுசிலுவென்ற காற்றும், ருசியான நீரும் வழங்கும் தமிழக மாவட்டங்களில் முதன்மையானது கோவைதான். அதற்கு முக்கிய காரணம் தமிழக - கேரள எல்லையோரம் அமைந்துள்ள சிறுவாணி அணை ஆகும். இந்த அணை கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள சிறுவாணி வனப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன்காரணமாக, 50 அடி கொள்ளவு உள்ள சிறுவாணியில் தற்போது நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, முழு கொள்ளவை எட்டி உள்ளது. இதனால் சிறுவாணி அணையில் நீர் புகு கிணற்றின் 4 வால்வுகளை தாண்டியும் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், கோவை மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைக்கும் என முழுமையாக நம்பப்படுகிறது. இந்த அணையிலிருந்து கோவை நகருக்கு 114 எம்.எல்.டி குடிநீர் வினியோகம் செய்து வரும் நிலையில், தற்போது சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கூடுதல் நீர் வினியோகம் செய்யப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications