மினி பஸ்களில் இரட்டை இலை… ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
சென்னை: அரசு மினி பஸ்களில் இலை ஓவியத்தை மறைக்க தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை சரியே என்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழக போக்குவரத்து துறையால் இயக்கப்படுகின்ற சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 10-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மனுவில், ‘‘சிறிய பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியம் அ.தி.மு.க.வின் சின்னம் அல்ல. அது மாசு இல்லாத பேருந்தை குறிக்கும் இலை ஓவியம். எனவே தேர்தல் கமிஷன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டது.
தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘சிறிய பஸ்களில் உள்ள இலை ஓவியம் அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை பிரதிபலிப்பதாக உள்ளது. இதனால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே அவற்றை மறைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது'' என்று கூறப்பட்டு இருந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அவர்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
சிறிய பேருந்தில் உள்ள இலை ஓவியத்தை உள்நோக்கம் இல்லாமல் தமிழக அரசு வரைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த இலை ஓவியம் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என இந்திய தேர்தல் ஆணையம் கருதுகிறது.
எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உயர்நீதின்றமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து சென்னை நகரில் ஓடும் சிறிய பஸ்களில் உள்ள இலை ஓவியம் மறைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இன்று முதல் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications