தைவானில் இருந்து வந்த விமானத்தில் ‘பாம்பு’ பார்சல்..சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !
சென்னை: தைவானில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு அஞ்சல் பார்சலை விமான நிலையத்தில், அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் இருந்ததால் ஆடிப்போன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தைவான் நாட்டில் இருந்து கடந்த ஞாயிறுக்கிழமை நள்ளிரவு சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. திங்கட்கிழமை காலை முதல் விமானத்தில் வந்த விரைவு அஞ்சல் பார்சல்களை அஞ்சலக பார்சல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். நேற்று காலையும் ஆய்வுப்பணி தொடர்ந்தது.

அப்போது, சென்னை கேகேநகர் 68வது தெரு முகவரியிட்ட ஒரு பார்சலில், உபயோகித்த வீட்டு பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அஞ்சலக அதிகாரிகள் பார்சலை பிரித்தனர். அதில் காஸ் அடுப்பு, மிக்சி மற்றும் டிவிடி பிளேயர்கள் இருந்தன.
வீட்டு உபயோக பொருட்களுடன், ஒரு பையில், 1 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது. அதை பார்த்த அஞ்சல் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாம்பு பார்சலை அனுப்பியவரின் முகவரி தைவான் மொழியில் இருந்ததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர்.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை கேகேநகர் 68வது தெருவிற்கு சென்று விசாரணை நடத்தியபோது, அது போலி முகவரி என்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக, விமான நிலைய சரக்ககத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுங்கத் துறையின், விமான சரக்கக உதவி கமிஷனர் சந்திரசேகர், மலைப்பாம்பை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications