கோவிலுக்குள் வந்த நாக பாம்பின் சுவடு 45 நாட்களாகியும் அப்படியே உள்ளது... பக்தர்கள் பரவசம்
திருவாரூர்: கோவிலுக்கு வந்த நாகப்பாம்பு சென்று 45 நாட்களாகியும் அது படுத்திருந்த இடத்தில் சுவடு அழியாமல் உள்ளதை பார்த்து பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள கைலாசநாதர் சிவபெருமான் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் கருவறையின் தெற்கு புறத்தில் மதில் சுவரின் உட்புறத்தில் உள்ள சிமென்ட் தளத்தில் கடந்த பிரதோஷ தினத்திற்கு முன்பு ஒரு நாக பாம்பு படுத்திருந்ததாம். கோவிலுக்குள் வந்த பாம்பு என்பதால் பக்தர்கள் அதை ஆர்வத்தோடு பார்த்து சென்றுள்ளனர்.

அந்த பாம்பின் வால் பகுதி தேய்ந்த நிலையில் இருந்துள்ளதையும் பக்தர்கள் கவனித்துள்ளனர். இந்நிலையில் ஒருநாள் கருவறையின் வலது புறத்தில் உள்ள கட்டிடத்தின் ஓரிடத்தில் அந்த நாகப்பாம்பு கொத்தியதாக கூறப்படுகிறது. இதன்பிறகு அந்த பாம்பை காணவில்லை.
பாம்பு கொத்திய இடத்தை தட்டி பார்த்தபோது நாகத்தின் உருவம் செதுக்கிய வடிவில் காணப்பட்டுள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த பக்தர்கள், நாகப்பாம்பு கொத்திய இடத்தில் மஞ்சளை பூசி பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனிடையே பாம்பு படுத்திருந்த சிமென்ட் தளத்தில் பாம்பின் உருவம் சுவடாக பதிந்து ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது. 45 நாட்களுக்கும் மேலாக வெயில் மற்றும் மழையிலும் அந்த சுவடு அழியாமல் உள்ளது. சுவடு மீது பக்தர்கள் பொட்டு வைத்து மலர் தூவி பய பக்தியுடன் வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு திருவாரூர் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications