பாலியல் புகார்... வேளாண் கல்லூரி முதல்வர்- பேராசிரியைகளிடம் பணம் கேட்டு மிரட்டும் மர்மநபர்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் முதல்வர் மற்றும் பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியைகளிடம் மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள வேளாண் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி மகிழேந்தி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
4 பேர்
இந்நிலையில் பாலியல் புகார் குறித்து மாணவியின் தோழிகள் 4 பேரை விசாரணைக்கு ஆஜராக கூடுதல் எஸ்பி வனிதா உத்தரவிட்டுள்ளார். இவர்கள் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து பேசிய ஆடியோ ஆதாரங்களையும் வனிதாவிடம் மாணவி ஒப்படைத்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
இதில் 10-க்கும் மேற்பட்ட உரையாடல் பதிவுகள் இருந்தன. இதனை வைத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் புனிதா, மைதிலி ஆகியோரையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணை
விசாரணை வளையத்திற்குள் பேராசிரியைகள் கொண்டு வரப்படுவதால் மாணவியின் பாலியல் தொல்லை புகாரில் பரபரப்பு தகவல்கள் வெளியாக கூடும் என தெரிகிறது. ஒரு வேளை விசாரணைக்கு ஆஜராக உதவி பேராசிரியரும், பேராசிரியர்களும் மறுத்தால் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முதல்வர் புகார்
இதனிடையே மாணவியின் பாலியல் புகாரை வைத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியைகளிடம் பணம் கேட்டு மர்மகும்பல் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் பிரச்சினையை பெரிதுப்படுத்துவோம் என்று மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளனர்.