எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் சாவு தற்கொலை அல்ல, கொலை: பெற்றோர் குமுறல்
விழுப்புரம்: சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளின் சாவில் மர்மம் இருப்பதாக தற்கொலை செய்து கொண்ட சரண்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல், தங்களை கொடுமைப்படுத்தியதாகக் கூறி மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரியின் தாளாளரின் மகனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். முன்னதாக கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், தங்களையே கழிப்பறையை சுத்தம் செய்வது முதல் பல வேலைகளை செய்யுமாறு வற்புறுத்துவதாகவும் கூறி மாணவிகள் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு டி.சி. அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளுக்கு டி.சி. வழங்கவில்லை.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட சரண்யாவின் பெற்றோர் கூறுகையில்,
கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை. விடுதியில் சாப்பாடு வசதியே இல்லை, கழிவறையை எங்களை சுத்தம் செய்ய வைக்கிறார்கள், பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை என்று எங்கள் மகள் பலமுறை தெரிவித்திருந்தார்.
இது குறித்து நாங்கள் கல்லூரிக்கு சென்று கேட்டால் நிர்வாகத்தினர் எங்கள் மகளை திட்டுவதாக அவள் தெரிவித்தாள். எங்களின் மகள் இறந்துவிட்டது பற்றி கல்லூரி நிர்வாகத்தினர் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. போலீசார் தான் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
எங்கள் மகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் நேரில் வந்து பார்த்தபோது எங்கள் மகளின் தலை உள்பட உடலில் ஆங்காங்கே காயம் இருந்தது. தற்கொலை செய்யும் முடிவை எங்கள் மகள் எடுத்திருக்கவே மாட்டார். அவரின் சாவில் மர்மம் இருக்கிறது என்றனர்.
மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறுகையில்,
எங்கள் மகளை அடித்துக் கொலை செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை அவருக்கு அளித்த சாப்பாடை அவர் சாப்பிடவில்லை. மாலையில் தான் என்னிடம் போனில் பேசினார். அவர் போன் பேசிய ஒரு மணிநேரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.
இந்நிலையில் கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியனை கைது செய்ய போலீசார் சென்னை சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. வாசுகியின் கணவர் சுப்பிரமணியன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக கோளாறுக்காக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கவனிக்க வாசுகி மருத்துவமனையில் தங்கியுள்ளார்.
இதற்கிடையே இன்று மதியம் எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications