சோனியா காந்திக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது: குண்டு ஆர்த்தி
விருதுநகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது என்று நடிகை குண்டு ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகை குண்டு ஆர்த்தி அருப்புக்கோட்டையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் ஊழலோ ஊழல். எங்கு பார்த்தாலும் ஊழலாகத் தான் உள்ளது. நம் நாடு அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் உள்ளது. ஜெயலலிதாவை பற்றி பிற கட்சிகள் தப்புத் தப்பாக பேசுகின்றன. ஜெயலலிதாவுக்கு படிப்பின் அருமை தெரிந்துள்ளதால் தான் கல்வியில் புரட்சி ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் தமிழ் என்று கூறும் ஒரு தலைவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் உள்ளது. கருணாநிதிக்கு ரூ.35 ஆயிரம் கோடி, மு.க. ஸ்டாலினுக்கு ரூ.10 ஆயிரம் கோடி, மாறன் சகோதரர்களுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி, ப. சிதம்பரத்திற்கு ரூ. 32 ஆயிரம் கோடி கருப்புப் பணம் உள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டு செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசே காரணம். சிதம்பரம் தன்னை ஒரு தமிழர் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வேண்டும். சோனியா காந்திக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது என்றார்.