பெண் சடலத்தை வைத்து ஆவிகளுடன் பேச்சு.. சித்து வேலை செய்த மந்திரவாதி உள்பட 4 பேர் கைது
பெண் சடலத்தை வைத்து மாந்ரீகம் செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்: இறந்த பெண்ணின் சடலத்தை வைத்து ஆவிகளுடன் பேசுவது உள்ளிட்ட பல்வேறு சித்து வேலைகளை செய்து வந்த மந்திரவாதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (33). இவர் பெரம்பலூர் பஸ்டாண்டு அருகே உள்ள எம்.ஏ.எம் நகரில் ரூ 20 ஆயிரத்திற்கு ஒரு வீட்டை மாத வாடகை எடுத்து சுமார் மூன்றரை ஆண்டுக்கு மேல் குடியிருந்து வந்துள்ளார்.
அந்த வீட்டில், பில்லி சூனியம், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பது, பெண்களை வசியம் செய்வது, ஆண்களை வசியம் செய்வது மற்றும் பல்வேறு பிரச்சினைகளை மந்திரம் மூலம் தீர்த்து வைப்பதாக கூறி சித்து வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் சுமார் 3 மாதம் ஆன பெண் சடலம் பதப்படுத்தி வைத்து மாந்தீரிகம் செய்யப்பட்டு வந்தது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாந்ரீகத்திற்கு பயன்படுத்திய மந்திர புத்தகங்கள், மண்டை ஓடுகள், எலும்புகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மாந்தீரீகம் செய்ய சடலத்தை சென்னையில் இருந்து விலைக்கு வாங்கியதாக மந்திரவாதி கார்த்திக் தெரிவித்துள்ளார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கில் பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இப்பெண் கொலை செய்யப்பட்டாரா, இல்லை இதில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மந்திரவாதி கார்த்தி உட்பட நான்கு பேர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறது. பெண் பிணத்தை வைத்து மாந்ரீகம் செய்தது பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.