அயன் பட பாணியில் கோகைனை விழுங்கி கடத்திய ஆப்பிரிக்க பெண் - சென்னையில் கைது
கோகைன் போதைப் பொருளை மாத்திரை போன்று விழுங்கி கடத்திய தென் ஆப்பிரிக்க பெண் சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சூர்யா நடித்த அயன் திரைப்படத்தில் போதை பொருளை மாத்திரையாக மாற்றி விழுங்க வைத்து வெளி நாடுகளுக்கு கடத்துவார்கள். அதே பாணியில் சென்னையில் போதை பொருள் கடத்தப்பட்டுள்ளது. அதை கடத்தியவர் ஒரு பெண். போதை பொருளை கடத்திய பெண்ணை கைது செய்து 5 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தென் ஆப்பிரிக்கவைச் சேர்ந்தவர் பிரின்சஸ் நோம்பிபிதி சோமி ,47. இவர் பிரேசிலின் தலைநகரான சா பாலோ நகரில் இருந்து அபுதாபி வழியாக நேற்று இரவு சென்னைக்கு வந்தார்.
சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்த அவர் போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை மறித்து சோதனை நடத்தினர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் கோகைன் என்னும் போதைப் பொருளை மாத்திரைகளாக மாற்றி விழுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் உரிய முறையில் அந்த மாத்திரைகளை வெளியே எடுத்து விட்டு அந்த பெண்ணை கைது செய்தனர்.
மொத்தம் 1.075 கிலோ எடையுள்ள போதை பொருளை 82 மாத்திரைகளாக மாற்றி அவர் விழுங்கியிருந்தார். சர்வதேச சந்தையில் இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி ஆகும். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்தப் பெண் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.