வேம்புலி அம்மன் கோவிலில் கோகுல இந்திரா.. தமிழகம் முழுவதும் அதிமுகவினர்.. திருவிளக்கு பூஜை!
சென்னை: சென்னை அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கோயில்களில் இன்று திருவிளக்குப் பூஜை நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை அப்பல்லோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வரும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அதிமுகவினர் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருகட்டமாக இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அதிமுகவினர் திருவிளக்குப் பூஜை நடத்தினர். காலை 6.30 மணியளவில் இந்த பூஜை நடைபெற்றது.
சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள வேம்புலியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் பெண்கள் விளக்கேற்றி சிறப்பு பூஜை செய்து திருவிளக்கு பூஜை நடத்தினர்.
இதேபோல், சென்னை ஜி.பி. சாலையில் உள்ள பெரியப்பாளையத்தம்மன் கோயிலில் ஜெ.பேரவை செயலாளர் ஜி.ரவிக்குமார் ஏற்பாட்டில் திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா தானம் நடைப்பெற்றது. இதில் அதிமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் கலந்து கொண்டு விளக்கேற்றி கோயிலுக்கு கோமாதா தானம் செய்தார்.