இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: மேலும் 11 மீனவர்களை சிறைபிடித்தது!
புதுக்கோட்டை: இலங்கை கடற்படை மீண்டும் 11 தமிழக மீனவர்களை சிறைபிடித்துள்ளது மீனவ கிராமங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக மீனவர்கள் நாள்தோறும் கடலுக்குச் செல்வதும் இலங்கை கடற்படையால் அடித்து விரட்டப்படுவது அல்லது கைது செய்யப்படுவது என்பதும் தொடர் கதையாகி வருகிறது.
மோடி அரசு பதவியேற்றபோது நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. இலங்கை மீனவர்களை தமிழக அரசும் விடுதலை செய்தது.
அதைத் தொடர்ந்து நாள்தோறும் மீனவர்களை கைது செய்வதாகவும் விடுவிப்பதாக அறிவிப்பை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டு வருகிறது இலங்கை. ஆனால் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கிறோம் என்று அறிவித்த பின்னரும் சிறையில் அடைத்து வருகிறது இலங்கை அரசு.
இந்த நிலையில் சென்னைக்கு அருகே இலங்கை மீனவர்கள் மீன்பிடித்து சிக்கினர். இதைத் தொடர்ந்து தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 11 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
அவர்களது 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது. தொடரும் இந்த சிறைபிடிப்புகளால் தமிழக மீனவ கிராமங்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன.