தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி விட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 500 மீனவர்கள் சனிக்கிழமை காலை விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர். அவர்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர்.
மேலும் சிலர் மீனவர்களின் வலைகளை அறுத்து எறிந்தனர். இதனால் பயந்து போன மீனவர்கள் வேறு வழியில்லாமல் கரைக்கு திரும்பினார்கள். இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தீர்வு கண்டால் மட்டுமே தாங்கள் நிம்மதியாக கடலுக்கு செல்ல முடியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதும், இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி, விரட்டி அடிப்பது அல்லது கைது செய்வதும் தொடர் கதையாக உள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு பல தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கச்சத்தீவை திரும்பப் பெற்றால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் கோபம் அடைந்துள்ளனர்.