சாமியாருடன் கள்ளத் தொடர்பு: கணவன், மகன், மகளை கொலை செய்த ஸ்ரீரங்கம் பெண் சிறையில் அடைப்பு
திருச்சி: சாமியாருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பினால் கணவன், மகன், மகளை கொலை செய்த பெண்ணை திருச்சி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியை அடுத்த திருவானைக்காவல் அகிலேண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் யமுனா (வயது 45). இவரது மகன் செல்வகுமார் (20), மகள் சத்யா (22) ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு புலிவலம் அருகே வீசப்பட்டனர்.
இந்த கொலைகளை செய்தது தாய் யமுனாதான் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரை சேர்ந்த சாமியார் கண்ணன் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலே கொலையில் வந்து முடிந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சாமி யார் கண்ணன், யமுனா, இவரது தாய் சீதாலட்சுமி (75) ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை காலையில் அகிலாண்டேஸ்வரி நகர் வீட்டிற்கு வந்த யமுனா மற்றும் அவரது தாய் சீதா லட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் ரசிகய இடத்தில் வைத்து 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர்.
கணவரை கொலை செய்தேன்
அப்போது குடும்ப பிரச்சினை தீர்க்க வீட்டிற்கு குறி சொல்ல வந்த சாமியார் கண்ணனுக்கும் தனக்கும் 10 வருடத்திற்கு முன்பு கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதை தட்டிக்கேட்ட கணவர் தங்கவேலுவை 10 வருடத்திற்கு முன்பே சாமியார் கண்ணனுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் யமுனா தெரிவித்தார்.
கண்டித்த மகன்
தொடர்ந்து சாமியார் கண்ணனுடன் இருந்த கள்ளத்தொடர்பை மகன் செல்வகுமார் கண்டித்ததாலும், சாமியாருடன் சேர்ந்து ரூ.4 கோடி ரூபாய் மதிப்புள்ள அகிலாண்டேஸ்வரி நகர் வீட்டை விற்க எதிர்ப்பு தெரிவித்ததாலும் செல்வகுமாரை கடந்த மாதம் 24-ந் தேதி கொலை செய்து வீசி விட்டதாகவும் கூறினார்.
மகளும் கொலை
மகன் செல்வகுமார் கொலை குறித்து மகள் சத்யாவிற்கு தெரிய வந்ததும் அவள் போலீசில் காட்டி கொடுக்க போகிறேன் என கூறியதால் கடந்த 14-ந் தேதி சத்யாவையும் சாமியார் கண்ணனுடன் சேர்ந்து கொலை செய்து வீசி விட்டதாக யமுனா தெரிவித்தார்.
திருச்சி சிறையில்
இரண்டு நாட்கள் விசாரணைக்கு பிறகு புலிவலம் இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் இன்று காலை யமுனா மற்றும் அவரது தாய் சீதாலட்சுமி ஆகியோரை போலீஸ் வேனில் ஏற்றி துறையூர் மாஜிஸ்திரேட்டு ஸ்தோத்திரம் மேரியிடம் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பெண்கள் மத்திய சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். கொலைகளுக்குக் காரணமான சாமியார் கண்ணன் தலைமறைவாக உள்ளார். அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications