ஸ்ரீரங்கம் தொகுதி 'காலி'... தமிழக சட்டசபைச் செயலாளர் ‘இணையத்தில்’ தகவல்!
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக சட்டசபைச் செயலாளர் ஜமாலுதீன் தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், அவரது எம்.எல்.ஏ. மற்றும் முதல்வர் பதவி பறி போனது.
ஆனபோதும், அவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் படாமல் இருந்தது. ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பின் நகல் தமிழக சட்ட சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் படித்து பார்த்த சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஸ்ரீரங்கம் தொகுதியை காலியான தொகுதியாக முறைப்படி நேற்று தேர்தல் கமிஷனுக்கு அறிவித்துள்ளார்.
இத்தகவல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.