எஸ்.ஐ பூங்கொடியுடன் கள்ளத் தொடர்பு… பில்லியம்மாளை எரித்துக்கொன்ற குணசுந்தரி
மதுரை: கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை, மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய சப் இன்ஸ்பெக்டரின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் பில்லியம்மாள் என்பதாகும். இவர் உசிலம்பட்டி அருகே உள்ள உ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் மனைவியாவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஏழு ஆண்டுகளுக்கு முன் செல்வம் மரணமடைந்துவிட்டார். இதனையடுத்து பில்லியம்மாள் ஆடுகளை மேய்த்து குழந்தைகளை வளர்த்து வந்தார்.
உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பூங்கொடிக்கும் பில்லியம்மாளுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பூங்கொடியின் மனைவி குணசுந்தரிக்கு தெரியவரவே அவர் சண்டை போட்டுள்ளார். ஆனாலும் இருவரின் உறவு நீடிக்கவே, ஆத்திரமடைந்த குணசுந்தரியும், அவரது உறவினர் ஒருவரும் வெள்ளிக்கிழமை இரவு உ.வாடிப்பட்டிக்கு சென்று பில்லியம்மாளிடம் தகராறு செய்துள்ளனர்.
தனது கணவர் உடனான தொடர்பை விடுமாறு குணசுந்தரி எச்சரித்துள்ளார். பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென்று தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை பில்லியம்மாள் மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார் குணசுந்தரி. இதில், உடல் முழுவதும் தீப்பிடித்து பில்லியம்மாள் அலறி துடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தவர்கள் பில்லியம்மாளை மீட்டு பலத்த தீக்காயங்களுடன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பில்லியம்மாள் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து பில்லியம்மாளின் உறவினர் ராமன் அளித்த புகாரின் பேரில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடத்திய போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி, அவரது மனைவி குணசுந்தரி உள்பட ஐவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.