நான், நான்... மகிழ்ச்சியில் பேச முடியாமல் நா தழுதழுத்த ஸ்டேட் ஃபர்ஸ்ட் பிரேமசுதா
நாமக்கல்: பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலாவது இடம்பிடித்த மாணவி பிரேமசுதாவால் மகிழ்ச்சியில் பேச முடியாமல் கண்கலங்கிவிட்டார்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த மாணவி பிரேமசுதா 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியான உடனேயே பிரபல செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்று பிரேமசுதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டது. ஆனால் மகிழ்ச்சியில் இருந்த அவரால் பேச முடியவில்லை. நான், நான் என்றவருக்கு வார்த்தைக்கு பதில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்ததால் பேட்டி அத்துடன் முடிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரேமசுதாவின் தந்தை கூறுகையில்,
நான் விவசாயம் செய்து வருகிறேன். என் மகளை நினைத்து ரொம்ப பெருமையாக உள்ளது. நான் அவரது பள்ளிக்கு செல்லும்போது எல்லாம் ஆசிரியர்கள் என்னை அழைத்து உங்கள் மகள் நன்றாக படிக்கிறாள் என்று கூறுவார்கள்.
என் மகளை டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.