நாமக்கல்: மதிப்பெண் குறைந்த விரக்தி- பள்ளி வகுப்பறையில் மாணவி தற்கொலை
நாமக்கல்: அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்த விரக்தியில் பள்ளி வகுப்பறையில் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே, காரைக்குறிச்சி புதூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தியின் மகள் அம்பிகா (15). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
வெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அம்பிகா மதிய உணவு இடைவேளையின் போது, வகுப்பு அறையில் தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த புதுச்சத்திரம் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கடந்த மாதம் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வில், அம்பிகா குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மனவேதனையில் இருந்தது தெரியவந்தது.
எனவே, மதிப்பெண் குறைந்த விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.