மாடர்ன் விவசாயி… பவர்லூம் தொழிலாளி... திருவண்ணாமலையில் ஸ்டாலின் புதிய அவதாரம்...
திருவண்ணாமலை: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள மு.க. ஸ்டாலின், ஒருபக்கம் பவர்லூம் தொழிலாளியாகவும், மறுபக்கம் மாடுகளில் ஏர் பூட்டி நிலத்தினை உழுதும் மக்களை கவர்ந்தார். உழவர் சந்தை, காய்கறி வியாபரிகள், விவசாயிகள், கூத்து கலைகள் என அனைவரிடமும் குறைகளை கேட்ட ஸ்டாலின், திமுக ஆட்சியில் உங்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
மூன்றாம் கட்டமாக நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பயணத்தை தொடங்கினார்.

வந்தவாசியில் வரவேற்பு
வந்தவாசி நகரில் மு.க.ஸ்டாலினுக்கு, தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு எந்திரம் மூலம் பாய் உற்பத்தி செய்வதை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

பாய் உற்பத்தியாளர்கள்
இதைத்தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாக வந்தவாசியில் மேல்மருத்துவத்தூர் சாலையில் உள்ள ஆலமரத்தெருவில் பாய் நெசவாளர்கள், பாய் உற்பத்தியாளர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார்.

காணொலி ஆட்சி
நமக்கு நாமே திட்ட நீண்ட நெடிய பயணத்தை கடந்த 2 மாதங்களாக மேற்கொண்டு வருகிறேன். பயணத்தின் போது விவசாயிகள், பாட்டாளிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என பல தரப்பு மக்களையும் சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிகிறேன்.தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு ஆட்சி நடந்து வருகிறது. அது ஒரு ஆட்சி அல்ல, காட்சி பொருளாகும். அதுவும் காணொலி காட்சியாகும்.

மாற்றம் வரவேண்டும்
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் சிறப்பான மாற்றத்தை பொதுமக்கள் ஏற்படுத்தி தரவேண்டும். அந்த மாற்றம் தி.மு.க. மூலம் வரவேண்டும்.

மாற்றம் தரும் பயணம்
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், தொழிலாளர்கள், தொழில் அதிபர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த பயணம் நடக்கிறது. இதுவரை 25 மாவட்டத்தில் 166 சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

உற்சாக வரவேற்பு
இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொண்டுள்ளேன். தற்போது வரை முக்கால்வாசி கிணற்றை தாண்டியுள்ளேன். மீதியை உங்களுடைய உற்சாக வரவேற்பால் தாண்டிவிடுவேன்.

பாய் நகரம்
தி.மு.க. ஆட்சியின் போது பல தரப்பு மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் திட்டங்கள் இப்போது வழங்கப்படுவதில்லை. மீண்டும் தி.மு.க. ஆட்சியில் கிடைத்த திட்டம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரி மேம்படுத்தப்படும். மேலும் வந்தவாசி பாய்நகரமாகவும் அறிவிக்கப்படும் என்றார்.

நடைபயணம்
இதையடுத்து வேன் மூலம் வந்தவாசி தேரடி வீதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து பஜார் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சியினர் வழிநெடுக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குழந்தைக்கு பெயர் சூட்டல்
செய்யாறு எல்லையில் ஒரு பெண் குழந்தைக்கு காவ்யா என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து காந்தி சாலை வழியாக பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறே காரில் மு.க.ஸ்டாலின் சென்றார்.

சைக்கிள் பயணம்
பஜார்வீதியில் உள்ள மசூதி அருகே காரை விட்டு கீழே இறங்கி வந்தார். சைக்கிளில் ஏறி சென்று பொதுமக்களை சந்தித்தவாரே சென்றார். அப்போது சில இடங்களில் நின்று பொதுமக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டார்.

காய்கறி வாங்கிய ஸ்டாலின்
உழவர் சந்தை வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளிலே சென்றார். உழவர் சந்தையில் விவசாயிகளை சந்தித்தார். விவசாயிகளிடம் இன்று காய்கறி விலைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களிடம் குறைகளையும் விசாரித்தார்.

பாசத்துடன் இளநீர்
விவசாயி ஒருவர் மு.க.ஸ்டாலினுக்கு இளநீர் கொடுத்தார். அதை அவர் பாசத்துடன் வாங்கி குடித்தார். அந்த விவசாயியை அரவணைத்து நன்றி தெரிவித்தார்.

வணிகர்களிடம் குறை கேட்பு
காய்கறி கடையில் காய்கறி வாங்க வந்த பெண்களிடம் உரையாடினார். அப்போது உழவர் சந்தையில் கட்சி நிர்வாகி ஒருவரின் ஆண் குழந்தைக்கு கதிரவன் என்று பெயர் சூட்டினார். இதை தொடர்ந்து ஆரணிக்கு புறப்பட்டு சென்றார். ஆரணியில் நெல் அரிசி மண்டி வணிகர்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

அரிசி பூங்கா
ஆரணியில் ஒருங்கிணைந்த அரிசி பூங்கா அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம், 2016ம் தேர்தல் அரிசி வியாபாரிகள் சந்திக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஏர் பூட்டிய ஸ்டாலின்
தஞ்சை மாவட்டத்தில் டிராக்டர் ஓட்டிய ஸ்டாலின், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்டைலை மாற்றினார், மாடுகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழுதார். திடீரென மாடர்ன் விவசாயி அவதாரம் எடுத்தார் ஸ்டாலின்.

கரும்பு விவசாயிகள்
போளூர் கரும்பு விவசாயிகள் மத்தியில் பேசிய ஸ்டாலின், எம்.ஜி.ஆர். ஆட்சியில் மின்கட்டணத்தில் ஒரு பைசா குறைக்க கோரி போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தை அப்போதைய எம்.ஜி.ஆர். அரசு கண்டுகொள்ளவில்லை.1989-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இலவச மின்சாரத்தை திட்டத்தை அமல்படுத்தினார். சாத்தனூர் அணை, போளூர் ஏரியை தூர்வார அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

கூத்து கலைஞர்கள்
கூத்து கலைஞர்கள் நிறைந்துள்ள செய்யாறை அடுத்த குரிசை பகுதிக்கு சென்று கூத்து கலைஞர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், கட்டைக்கூத்து நடனமாடி அவரை வரவேற்றனர். அவர்களின் நடனத்தை சிறிது நேரம் ரசித்த ஸ்டாலின், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நடன கலைஞர்கள் அவருக்கு கடாயுதம் வழங்கி நமக்கு நாமே பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications