அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது: ஸ்டாலின்
சென்னை: வாக்காளர்களுக்கு அதிமுக பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை வழங்குவதை தேர்தல் ஆணையம் எட்டி நின்று வேடிக்கை பார்ப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் வன்முறையைத் தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மாலை முதல் இன்று காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. ஆனால், இந்த உத்தரவை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதாக நேற்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
அதனைத் தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையம் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது...
தி.மு.க.வுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு, அ.தி.மு.க.வுக்கு தோல்வி பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறையின் உதவியுடன் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கும் அராஜகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். காவல்துறை கைகட்டி நிற்கிறது. தேர்தல் ஆணையமோ எட்டி நின்று வேடிக்கை பார்க்கிறது.

வீண் செலவு தான் ஒரே சாதனை....
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இரு முறை மத்திய அரசுக்கு ஆதரவளித்தது. அதில் ஒரு முறை அமைச்சரவையிலேயே பங்கேற்றது. ஆனால் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தன் வழக்குகளை திரும்பப்பெற மறுத்த மத்திய ஆட்சியை கவிழ்த்து மறு தேர்தலை கொண்டு வந்ததும், ரூ.4 ஆயிரம் கோடி வீண் செலவை ஏற்படுத்தியதும் தான் அ.தி.மு.க. செய்த ஒரே சாதனை.

முட்டுக்கட்டை...
தி.மு.க.வின் மக்கள் நலத்திட்டங்களையும், மத்திய அரசில் இருந்த போது கொண்டு வந்த திட்டங்களையும் சீர்தூக்கிப்பாருங்கள். மத்திய ஆட்சிக்கு தி.மு.க. அளித்த நிலையான ஆதரவை யோசியுங்கள். அதே நேரத்தில் அ.தி.மு.க. வளர்ச்சித்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையும், விலைவாசியை விண்ணளவிற்கு உயர விடுவதையும் பாருங்கள். 3 வருடமாக மின்வெட்டை நீக்காமல் சாக்குப்போக்கு சொல்வதை நினைவில் கொள்ளுங்கள்.

யாருக்கு உங்கள் ஓட்டு...
தமிழர்களுக்காக, தமிழக நலனுக்காக, இந்தியாவின் பன்முகத்தன்மைக்காக பாடுபடும் தி.மு.க.வா? ராமர் கோவில் கட்ட, பொதுச் சிவில் சட்டம் கொண்டு வர, விலைவாசியை உயர்த்த, ஆட்சியை கவிழ்க்க முனைப்போடு இருக்கும் அ.தி.மு.க.வா? யாருக்கு உங்கள் வாக்கு என்பதை வாக்களிக்கும் முன்பு ஒரு நிமிடம் சீர்தூக்கிப் பாருங்கள்.

நிலையான ஆட்சி...
ஒரு நிமிடம் நீங்கள் யோசித்தால் போதும். 5 வருடத்திற்கு தமிழகம் செழிக்க, பொருளாதார திட்டங்கள் கிடைக்க, மத்தியில் மதசார்பற்ற நிலையான ஆட்சி அமைய, இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்ற- உங்கள் முன் இருக்கும் ஒரே நம்பகத்தன்மை கொண்ட கட்சியான தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்' என இவ்வாறு தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications