எனக்கொரு சந்தேகம்... முதல்வர் ஒபிஎஸ்க்கு அமைச்சர்கள் ஆதரவு இருக்கிறதா? - ஸ்டாலின்
முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அமைச்சர்களின் ஆதரவு இருக்கிறதா? என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றுள்ளார். ஏற்கனவே தமிழக முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தார் ஓ.பன்னீர் செல்வம். அவரின் எளிமையை மக்கள் அறிந்துள்ளனர்.
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும், நேரம் வரும்போது, பன்னீர் செல்வம் விட்டுக் கொடுப்பார்'' என்று மாநில வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் கடந்த வாரம் கூறியிருந்தார். பல அமைச்சர்களும் கட்சியையும், ஆட்சியையும் சசிகலா வழி நடத்த வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் பன்னீர் செல்வம் நல்ல ஆளுமை திறன் மிக்கவர். ஏன் அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவரைத்தான் கட்சியின் பொதுச் செயலாளராக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
அதிமுகவின் பொதுச் செயலாளராவதற்கு தமிழகம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களிடம் சசிகலா ஆதரவு கடிதம் பெற்று வருகிறார். வரும் 29ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு சசிகலா வராமலே அவர் பொதுச் செயலளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், அவருக்கு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை வைப்பது, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சசிகலா முதல்வராக வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை வைப்பது, முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அமைச்சர்களின் ஆதரவு இல்லையா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.