தமிழகத்தில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும்.. ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானதால் திமுகவின் வெற்றி சற்று தாமதமாகி உள்ளது என்றும் தமிழகத்தில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் நாம் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதுவண்ணாரபேட்டையில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்துக்கு பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அணியினர் தான் முக்கிய காரணம். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஊழலுக்கு காரணமும், பாஜகவின் நிழலில் ஒளிந்து கொண்டுள்ள மணல் மாஃபியா ஓபிஎஸ் தான்.
வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய தமிழக முதல்வர் மீதும், அமைச்சர்கள் மீதும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும். பணப் பட்டுவாடாவால் ஜனநாயகம் சீர் குலைந்துள்ளது. ஒரு தொகுதியில் தேர்தலை நடத்த ஆணையத்தால் முடியவில்லை. தவறு செய்த ஒரு சிலருக்காக தேர்தலை ரத்து செய்வது நியாமா?
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானதால் திமுகவின் வெற்றி சற்று தாமதமாகி உள்ளது. தேர்தலுக்கு பின்னர் வாக்காளர்களுக்கு திமுக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்த வேண்டிய நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications