அரைகுறைத் திட்டங்கள்... கடைசி நேர லஞ்சத் தாண்டவம் தலைவிரித்தாடுகிறது: ஸ்டாலின்
சென்னை: முறைகேடு சந்தேகங்களை உறுதி செய்யும் வகையில் அதிமுக அரசின் கடைசி நேர பணி நியமனங்கள் அமைந்திருப்பதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிமுக பணி நியமனங்களில் முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைந்தவுடன் இவைகுறித்து,முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்தும் சட்டப்படி மறுபரிசீலனைக் குட்படுத்தப்படும் என்றும்; உரிய தகுதி உடையவர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

முறைகேடுகள்...
தமிழக இளைஞர்களில் 86 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு பணியிடங்கள் பலவற்றிலும் முறைகேடான நியமனங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு தனது ஆட்சி போகும் நேரத்தில் வேக வேகமாக செய்து வருகிறது. வெளிப்படைத் தன்மை இல்லாத இந்த நியமனங்களில் முறைகேடுகள் தாண்டவமாடுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

போராட்டங்கள்...
பல்லைக்கழகத் துணை வேந்தர் நியமனங்கள், கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்கள் உள்பட பலவற்றிலும் முறைகேடுகளைக் கண்டித்து அந்தந்த நிறுவனங்களைச் சேர்ந்த சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசு பொது தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சியின் உறுப்பினர்கள் நியமனத்தில் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்ட நடை முறைகளை தமிழ்நாடு அறியும். அ.தி.மு.க வழக்கறிஞர்கள் உள்பட ஆளுங்கட்சியினர் வெளிப் படையாகவே நியமிக்கப்பட்டார்கள்.

பணி நியமனம்...
அரசாங்கத்தில் எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குரிய தகுதிகளுடன் விண்ணப்பித்துக் காத்திருப்பவர்களைத் தவிர்த்து, பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கும் சந்தேகங்களுக்கும் வலு சேர்க்கும் வகையில் நேற்றைய முன்தினம் (பிப்ரவரி 26) செய்தி- மக்கள் தொடர்புத் துறையில் 40 ஏ.பி.ஆர்.ஓ.க்கள் (உதவி மக்கள் தொடர்பு அதிகரிகள்) பணி நியமனம் நடந்துள்ளது.

பேரம்...
இந்த 40 பேரில் ஒருவர் ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ வளர்மதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆளுங்கட்சியை சார்ந்தவர்களுக்கே இப்பணி என்ற அடிப்படையில், ஒரு பதவிக்கு தலா 20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதகாக அந்தக் கட்சியினரே தெரிவிக்கக் கூடிய அவல நிலை உருவாகியுள்ளது.

லஞ்சத் தாண்டவம்...
ஆட்சி முடியப் போகிறது என்றதும் அவசர அவசரமான முறையிலே அரைகுறை திட்டங்களைத் தொடங்கி வைப்பது போலவே, கடைசி நேர லஞ்சத் தாண்டவமும் தலைவிரித்தாடுகிறது. இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும் எனக் காத்திருப்போம். கழக அரசு அமைந்தவுடன் இவைகுறித்து,முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, அனைத்தும் சட்டப்படி மறுபரிசீலனைக் குட்படுத்தப்படும் என்றும்; உரிய தகுதி உடையவர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி, பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications