செல்போன் கொடுத்தா போதுமா? ஜெ. செல் நம்பரை கொடுப்பாரா? கேட்கிறார் ஸ்டாலின்
பழனி: சட்டசபையில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு செல்போன் கொடுப்பதாக ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இலவச செல்போன் கொடுத்தால் மட்டும் போதுமா? ரீசார்ஜ் செய்வது யார்? என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். செல்போனை சார்ஜ் போட கரண்ட் வேண்டுமே என்று கூறிய ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதாவின் செல்போனை மக்களுக்கு கொடுப்பாரா என்றும் கேட்டுள்ளார்.

நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின், இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்தார். பெண்கள், சுயஉதவிக்குழுவினர், விவசாயிகளை சந்தித்து வரும் பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர், சட்டசபையில் இன்று முதல்வர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு இலவச செல்போன் தருவதாக அறிவித்துள்ளார். உங்ககிட்ட செல்போன் இருக்கா இல்லையா? இன்றைக்கு யார்கிட்ட செல்போன் இல்லை. எல்லோர்கிட்டையும் இருக்கு. பிச்சை எடுப்பவர்கள் செல்போன் வைத்திருக்கிறார்கள். நரிக்குறவர்கள் செல்போன் வைத்திருக்கிறார்கள்.

செல்போன் கொடுத்தா போதுமா? ரீசார்ஜ் பண்ண வேண்டாமா? கரண்ட் இல்லையே செல்போனை எப்படி சார்ஜ் செய்வது? செல்போன் கொடுக்கும் ஜெயலலிதா அவருடைய செல்போன் நம்பரை கொடுப்பாரா? அப்படி நம்பரைக் கொடுத்தால் மக்கள் எளிதாக தங்களின் குறைகளை நேரடியாக முதல்வரிடம் கூறலாம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தினசரி 110 விதியின் கீழ் வெளியிடுகிறார் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.













Click it and Unblock the Notifications