அவதூறு வழக்கு: ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் மதுரை ஹைகோர்ட்டில் மனு
மதுரை: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார்.
திண்டுக்கல்லில் கடந்த 2013 ஜூன் 6 ல் தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதில் அ.தி.மு.க., அரசின் நிலைப்பாடு, அரசின் நலத்திட்டங்கள் குறித்து விமர்சித்து, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக ஸ்டாலின் பேசியதாகக் கூறி, திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
ஸ்டாலின்,'எதிர்க்கட்சிகளின் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் வகையில், தமிழக அரசு உள்நோக்குடன் என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. தற்போது சட்டசபை கூட்டம் நடப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதனால் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.விமலா முன், மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி, "இம்மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்," என்றார்.
இதற்கு அரசு வழக்கறிஞர் கந்தசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, "இம்மனுவிற்கு பிரதான எண் இடப்பட்டு, இன்று (ஆக.,5) விசாரணைக்கு பட்டியலிடப்படும்," என்றார்.